எங்கோ ஒரு நட்சத்திரமாக




மரமென்பது முதலில்
ஒரு விதையென்பதைத் தாண்டி..
ஒரு மெல்லியத் தண்டு..
பின்னொரு வலிமையான தண்டு..
பின்,ஒரு பட்டுப்போன விறகு..
இவையெல்லாவற்றையும் விட..
அது,முதலில்
இவ்வானை தொட்டுவிட‌ முயலும்
ஒரு எல்லையில்லா சக்தியாகவே உயிர் பெறுகிறது...






மிகவும் ரகசியம் வாய்ந்தது...
இந்தக் கண்ணீர்களின் நிலம்...



அந்த தசைகளைத் தாண்டி
அவன் அரத்தழுவ விரும்பியது..
அந்த நொடிந்த சுயத்தையும்
அந்த இருளையும்
அவற்றினுள் உறங்கும்
அந்த தொட்டுணர முடியா பேரொளியையும் தான்...







வாழ்தல் என்பது
மீண்டும் ஒருமுறை
தன்னை மெதுவாக
பிறப்பித்துக் கொள்ளுதலே..






நம்முடன் என்றும் இருப்பதற்காகவோ
நம் சுயத்தை சரி செய்வதற்காகவோ அல்ல...


அவர்கள் இந்நிகழ்காலத்தை விடவும்
உயிர்ப்பெற்று இருப்பதினால் மட்டுமே
நம்மை விட்டுச் சென்றவர்களின்
நினைவுகளை கொண்டாடப்போகிறோம்...
கொண்டாடுகிறோம்...




யாரோ ஒருவர் 
ஓர் ஆட்டுக்குட்டிக்காக ஆசைப்பட்டால்..
எங்கோ ஓர் மந்தையில்
இவ்விரல்களின் தொடுதலுக்காக
அது வாழ்ந்து கொண்டிருக்கிறது...

-ஆந்துவான் து செய்ந்த் எக்சுபரி..



1900 லில் பிறந்த ஆந்துவான் து செயிந்த் எக்சுபரி,பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்தவர்.. ராணுவத்தில் பணிபுரிந்த எக்சுபரிக்கு,எழுத்தில் ஏற்பட்ட அழியாத தாக்கத்தினாலும் தீராத காதலினாலும், புத்தகங்கள் எழுத துவங்கினார்..தன் வாழ்நாள் முழுவதும் நான்கு புத்தகங்கள் எழுதிய எக்சுபரிக்கு, பிரெஞ்ச் அரசு தன் நாட்டின் உயரிய இலக்கிய விருதான 'லாரியெட்' என்னும் விருதை அளித்து கௌரவித்தது...பறத்தலில் தன்னை உணரத்துவங்கிய எக்சுபரி,1944ல் தான் மறையும் இறுதி கணங்களிலும் அதை உணர்ந்து கொண்டிருந்தார் என்பதே என்னை இன்றும் எக்சுபரியின் எழுத்துகளுக்கு ஈர்க்கிறது... தன் மகனின் உடல் கிடைக்கவில்லை,அவனுக்கென்று ஒரு கல்லறையில்லை என்றாலும்,பறந்து விரிந்து நிற்கும் இந்த வானில் அவன் எங்கோ ஒரு நட்சத்திரமாக மட்டுமே மாறியிருக்கிறான் என்று கூறியே,அவருக்காக எழுதிய கடிதத்தில் கூறி முடிக்கிறார் எக்சுபரியின் அம்மா... என் நாளின் இறுதியில் அன்னாந்து பார்க்கையில்... மங்கிய நிலவுக்கு அருகில் சின்னதாக அந்த நட்சத்திரம் மின்னும்போது.... நான் குட்டி இளவரசன் படித்து வேகமாக மாடிப்படி ஏறி மேலே பார்க்கையில்... என்னை அறியாமல் வடிந்த கண்ணீரும்... சுவரின் ஓரம் எட்டிப்பார்த்த கொன்றை பூவை பிடிங்கி வான் நோக்கி வைத்ததுமே என் நினைவில் நிரம்பி இருக்கிறது...


ஒளிப்படங்களும், மொழி பெயர்ப்பும்





Comments

Popular posts from this blog

We are building Cuckoo

Cuckoo Forest School

Nothing Goes to waste in Nature or Art